முடி உதிர்தல். வழுக்கை புழுவெட்டு இளநரை பொடுகு பேன் தொல்லை

கேசக் கோளாறுகள் அபாயமானவை அல்ல. உயிருக்கு ஆபத்துமில்லை.இருந்தாலும் அழகிய தோற்றம் தன்னம்பிக்கையை உண்டாக்கும். அழகிய தோற்றத்திற்கு தேவையான ஒன்று பெண்களுக்கு அடர்த்தியான கூந்தல், ஆண்களுக்கு வழுக்கையில்லாத முடி. பெண்களைப் போலவே ஆண்களுக்கும், வயதானாலும், இளமை தோற்றத்துடன் நரை, திரை இல்லாமல் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கத்தான் செய்கிறது. தலைவாரி, சீப்பை பார்த்தால், அதில் கொத்தாக உதிர்ந்த முடி தெரிந்தால் பெண்களுக்கு மனப்பதட்டம் ஏற்படும்.

 முடிப்பிரச்சனைகள்
முடி உதிர்தல், முடி மெலிவு, முடிநுனி உடைதல்.
வழுக்கை
புழுவெட்டு
இளநரை
பொடுகு
பேன் தொல்லை

அதீத முடி, முடி தேவையில்லா இடங்களில் அதிகம் வளர்வது. உதாரணம் பெண்களின் முகத்தில்
இந்த பாதிப்புகளை ஒவ்வொன்றாக, விரிவாக பார்ப்போம்.
முடி உதிர்தல், முடி மெலிவு, வழுக்கை மற்றும் புழுவெட்டு
முடி கொட்டுவது என்பது நாம் எண்ணுவதை விட மிகச் சாதாரணமானது. பல நேரங்களில் அது தற்காலிகமானதாகவும், சில நேரங்களில் நிரந்தமானதாகவும் இருக்கலாம்.

தலை வாரும் போது முடி கொத்தாகக் கையோடு வருகிறதா வாஷ்பேஸின் முழுக்க முடியாக இருக்கிறதா நேற்று வரை உங்கள் தோற்றப் பொலிவிற்கு உதவிய உங்கள் கேசம் இன்று கலகலத்துத் தட்டையாக தோற்றமளிக்கிறதா பதட்டப்படாதீர்கள்.

முடி கொட்டுவது பெண்களிடையே இயல்பாக ஏற்படக் கூடிய ஒன்று தான். முடி கொட்டுவதும் மறுபடி முளைப்பதும் நடைமுறைச் செயல்கள். நாம் ஒவ்வொருவரும் தினமும் 50 முதல் 200 முடிவரை இழக்கிறோம். இதில் வேதனைப்பட எதுவுமில்லை.

வேதனைப்படுவதைத் தடுக்க முடியவில்லை என்றால் இதோ ஒரு ஆறுதல். கொட்டுகின்ற முடிகளில் ஒன்றிரண்டை எடுத்து முடியின் வேர்ப்பகுதியை உற்று நோக்குங்கள். மிக மெலிதான நுண்ணிய வெள்ளை உருண்டை ஒன்று இருக்கிறதா என்று பாருங்கள். அவ்வாறு ஒரு சிறிய வெள்ளை உருண்டை இருந்தால் உங்கள் முடி இயல்பாகவே இருக்கிறது. அது பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். அவ்வாறு இல்லாமல் போனாலோ அல்லது முடி இழப்பு கட்டுக்கு மீறி இருப்பதுடன் அது தொடர்ந்தாலோ நீங்கள் சரும நோயியலார் அல்லது முடியியலார் ஒருவரைக் கண்டு ஆலோசனை பெறுவது நல்லது.

முடி உதிர்தல் படிப்படியாக நிகழலாம். இல்லை திடீரென்று ஏற்படலாம். முடி கத்திரிக்கப்பட்டது போல், உதிர்ந்தால், அது ஒய்வுப் பருவத்திலிருந்து உதிர்ந்திருக்கும். இல்லை புழுவெட்டு காரணமாகலாம். பழுப்பு நிறத்தில் மெழுகு போன்ற முடிச்சு காணப்பட்டால், முடி வளர் பருவம் பாதிக்கப்பட்டு முடி உதிர்ந்திருக்கின்றன என்று தெரிந்து கொள்ளலாம். முடி உதிர்வதற்கு ஏராளமான காரணங்களை கூறலாம். கிட்டத்தட்ட 50 காரணங்கள் சொல்லாம். அவற்றில் சில முக்கியமானவற்றை பார்ப்போம்.

பரம்பரை – முக்கியமாக ஆண்களின் வழுக்கைக்கு பரம்பரை காரணமாகிறது. தந்தைக்கு வழுக்கை இருந்தால் மகனுக்கும் ஏற்படும்.

ஊட்டச்சத்து குறைபாடு – சமச்சீர் உணவு இல்லாவிட்டால், தலைமுடிக்கு தேவையான புரதம் போன்றவை கிடைக்காது. உணவில், புரதம், கார்போஹைடிரேட், கொழுப்பு தவிர வைட்டமின்களும், இரும்பு செலீனியம், கால்சியம், துத்தநாகம் போன்ற தாதுப்பொருட்களும் தேவை. இவை இல்லாவிட்டால் முடி வளர்ச்சியின்றி போகும், உதிர்ந்துவிடும். வைட்டமின் பி6, ஃபோலிக் அமிலம் வைட்டமின் பி12 இவை குறைந்தால் முறையே முடி உதிர்தல், முடிவழுக்கை ஏற்படும். வேளை தவறி சாப்பிடுவதும் ஒரு முக்கிய காரணம்.

ஸைகோசிஸ் – ஃபோலிக்யூலைட்டிஸ் போன்ற தொற்று நோய்கள், முடி உதிர்வை உண்டாக்குகின்றன. பொடுகு, பேன், ஃபங்கஸ், பாக்டீரியாக்களும் முடியை பாதிக்கின்றன.

சர்மத்தின் விளையும் பயிரான முடி, சர்மத்தில் ஏற்படும் நோய்களாலும் பாதிக்கப்படும். சோரியாசிஸ், தேமல், கரப்பான் போன்ற தோல் வியாதிகள் முடியையும் பாதிக்கும் கூந்தலை பாதுகாப்பது மட்டும் போதாது; தோலையும் பராமரிக்க வேண்டும்.

டைபாய்ட், மலேரியா, காமாலை, இவற்றால் முடி உதிரும். பாலியல் நோயான சிபிலிஸ்ஸாலும் முடி உதிரும். பெண்களுக்கு கருப்பை நீர்கட்டிகள், ஃபைப்ராய்ட் இவைகளாலும் முடி உதிரும்.
ஹார்மோன் சீர்கேடுகளும் முடி இழப்புக்கு காரணமாகும். ஹார்மோன் குறைபாடுகள் பிறவியிலேயே தோன்றியிருக்கலாம்.
கவலை, டென்ஷன், ஸ்ட்ரெஸ் இவையும் காரணமாகும்.
உடல் உஷ்ணம் அதிகமானாலும் முடி கொட்டும். உள்ளங்கால்களின் சூடு, கேச மூலங்களின் அழற்சியை உண்டாக்கும்.

புற்றுநோய்க்காக கொடுக்கப்படும் மருந்துகளால் தலைமுடி முற்றிலும் கொட்டி விடும். கதிர்வீச்சு சிகிச்சையாலும் முடி கொட்டும்.
சோகை முடி உதிர காரணமாகலாம்.
குளிக்கும் தண்ணீர் மாறுபடுதல், குளோரின் அதிகமுள்ள தண்ணீர், உப்புத்தண்ணீர் இவைகளும் காரணமாகலாம்.
முடி ஈரமாக இருக்கும் போது பலவீனமாக இருக்கும். அப்போது தலைவாரிக் கொண்டால் முடி சுலபமாக உடைந்து விடும்.
கூந்தலை சரிவர பராமரிக்காதது. தலையில் வியர்வை, அழுக்கு சேர்தல். முடியில் சிக்கெடுக்காமல் விட்டுவிடுவது. தலையணை உறைகளை மாற்றாமல், அப்படியே அழுக்குடன் பயன்படுத்துவது. இறுக்கமான ரப்பர் பேண்ட் அணிதல், கொண்டை போடுவதற்காக முடியை இறுக்கமாக கட்டுதல் இவைகளும் முடி வளர்ச்சியை நிறுத்தி, முடி உதிர காரணமாகலாம். அதிகமாக ஹேர் டிரையர் உபயோகிப்பதும் தவறு. முடியை கருமையாக்க பூசும் சாயமும் காரணமாகலாம்.

பெண்களுக்கு, அவர்களில் மாதவிடாய் கோளாறு தலைமுடியையும் பாதிக்கும். அதிக உதிரப்போக்கு பலவீனத்தை உண்டாக்கும். பிரசவம், கருச்சிதைவு இவற்றின் போது, உதிர இழப்பு அதிகமானால், முடி உதிரும்.
அஜீரணம், மலச்சிக்கல், நரம்பு மண்டல நோய்கள் இவற்றாலும் முடி உதிரலாம். பாதத்திலிருந்து தலை வரை செல்லும் நரம்புகள் பாதிக்கப்பட்டாலும், முடி உதிரலாம். காலில் வெடிப்பு, கால்ஆணி, இவைகளாலும் முடி உதிரலாம். தலைக்கு இரத்த ஓட்டம் சீராக இருந்தால், முடிவேர்களுக்கு தேவையான ரத்தம் தடைபடாமல் செல்லும். உடலில் கொழுப்பு அதிகமானால், இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு முடிக்கு போஷாக்கு செல்லாமல் போகும்.

சிலர், குறிப்பாக சிறுவர், சிறுமிகள், அடிக்கடி முடியை இழுக்கும் பழக்கத்திற்கு ஆளாகின்றனர். இதை ட்ரைகோடிலோமானியா என்பார்கள். இந்த பழக்கத்தால் விரைவாக முடி உதிரும்.
மண்டையை கவனியுங்கள்
உங்கள் உணவு, தலை மண்டையை பாதிக்கலாம். தலை எண்ணை பசைஇன்றி உலர்ந்திருந்தால், அதிக அமிலம் உள்ள உணவை தவிர்க்கவும்.
பெண்களானாலும், ஆண்களானாலும் சரி, வெளியில் செல்கையில் தலையை துணி அல்லது தொப்பி, குடை இவற்றால் பாதுகாத்துச் செல்லவும்.
ஸ்ரெட்ஸ்ஸை தவிர்க்கவும்.
தினமும் தலையை சில நிமிடங்கள் மசாஜ் செய்யவும்.
பலமுடிப்பிரச்சனைகளுக்கு ஆரோக்கியமற்ற தலை சருமம் தான் காரணம்.
உதிர்தல், வழுக்கையை ஆங்கிலத்தில் அலோபேசியா என்பார்கள். இவற்றை மூன்று விதமாக சொல்லலாம்.

ஆண்ட்ரோஜெனடிக் அலோபேசியா
உலகின் பாதி ஆண்களுக்கு ஏற்படும் வழுக்கை பெண்களுக்கு 10-20 சதவிகிதம் வரை பாதிக்கும். பெண்களுக்கு ஆண்களை போல் வழுக்கை ஏற்படுவது அபூர்வம். முன்பே சொன்னபடி ஆண் ஹார்மோனான டை-ஹைட்ரோ டெஸ்டோஸ் டிரான் சிறிது அதிகமாக வேலை செய்தால், மற்ற பிறவி காரணங்களும் சேர்ந்து, முடிக்கால்களை சிதைத்து, மீண்டும் முடி வளரவிடாமல் தடுத்து, வழுக்கையை உண்டாக்கலாம். இது போன்ற முடி உதிர்தல் எந்த வயதிலும் ஏற்படலாம். முதலில் முன்நெற்றியிலிருந்து வழுக்கை ஆரம்பிக்கும். தலையின் நடு உச்சியிலிருந்தும். வழுக்கை ஆரம்பிக்கலாம். முடிவில் தலையின் பின்புறத்திலும், பக்கவாட்டிலும் சிறிது முடி மிஞ்சலாம்.

டாக்ஸிக் அலோபேசியா- இந்த வகை முடி இழப்பு பெரும்பாலும், தீவிரமான ஜுரம், திடீர் உடல் எடை இழப்பு, சில மருந்துகளாலும் ஏற்படும். புற்றுநோய்க்கு கொடுக்கப்படும் மருந்து சிகிச்சை, உயர் இரத்த அழுத்தம், பெண்களுக்கான குடும்பக்கட்டுப்பாடு மாத்திரைகள், அதிக விட்டமின் ஏ, மனநோய்க்கான மாத்திரைகள், இவைகளும் இந்த வழுக்கையை உண்டாக்கும். தைராய்டு சுரப்பிகள் அல்லது பிட்யூடரி சுரப்பிகள் குறைவாக சுரந்தாலும் ஏற்படும் பிரசவத்திற்கு பிறகும் இந்த முடி இழப்பு உண்டாகும். இந்த வகை வழுக்கை தற்காலிகமானது. இந்தப்பிரச்சனைகள் தீர்ந்தவுடன் முடி திரும்பவும் முளைக்கும்.

அலோபேசியா அரியாடா – இதை நாம் புழுவெட்டு என்கிறோம். இதில் துணியில் ஒட்டு போட்டது போல், திட்டு திட்டாக, ஆங்காங்கு முடி உதிரும். இதன் காரணம் சரிவர தெரியவில்லை. ஆடோ-இம்யூன் எதிர்வினை நோய் என்ற வியாதி காரணமாகலாம். நமது உடலின் ஆன்டி-பாடிகள் நோய் கிருமிகளை எதிர்ப்பவை தவறுதலாக நமது முடி உறைகளை அழிப்பது தான் இந்த வியாதி. வேலியே பயிரை மேய்ந்த கதை. தலை, மண்டை மற்றும் புருவம், கண் இமை, தாடி முளைக்கும் இடங்களில் இந்த புழுவெட்டு ஏற்படும். புழுவெட்டு இரு பாலினரையும் தாக்கும். எந்த வயதில் வேண்டுமானாலும் வரும். குறிப்பாக சிறுவர், மற்றும் இளைஞர்களை தாக்கும். புழுவெட்டு இருக்கும் சிலருக்கு, தைராய்டு சுரப்பி பாதிக்கப்பட்டிருக்கும். இந்த திட்டு திட்டாக முடி உதிர்ந்த பின், பலமாதங்களில் திரும்பி முடிவளரும். ஆனால் தலை முழுவதும் பாதிக்கப்பட்டிருந்தால், மறுபடியும் முடி வளருவது கடினம். இதை அலோபேசியா டோடாலிஸ் என்பார்கள். அபூர்வமாக உடல் முழுவதும் தலை உட்பட முடி கொட்டிவிடும். இதை அலோபேசியா யூனிவர்சாலிஸ் என்பார்கள்.

ஸ்காரிங் அலோபேசியா – உடலில் முடிவளரும் பிரதேசங்களில் காயப்பட்டபின் ஏற்படும் தழும்பு, வழு போன்ற இடங்களில் மயிர் உதிர்ந்து விடும். தீப்புண், எக்ஸ்ரே பட்ட இடம், அடிபடுதல் இவைகளால் தோலில் தழும்புகள் ஏற்படும். இந்த இடங்களில் முடி திரும்ப வளராது. தோல் புற்றுநோயும் காயங்களை உண்டாக்கும்.
முடியை பிடித்து இழுக்கும் பழக்கம் – நல்ல முடியை வெடிக்கென்று பிரித்து எறிவது சிலருடைய பழக்கம் – குறிப்பாக இளைஞர், இளைஞிகளில் தோன்றும் பழக்கம் இது. இதனால் முடி இழப்பு மட்டுமில்ல, முடி வேறுகாரணங்களில் உதிருகிறது என்று டாக்டர் தவறுதலாக எண்ணக்கூடும். இந்த முடியிழுக்கும் பழக்கம் மனோ ரீதியாக, டென்ஷன், கவலையால் ஏற்படலாம். இந்த பழக்கம் தனக்கு இருக்கிறது என்பதே அவருக்கு தெரியாமல் போகும். இது ஒரு தற்காலிக பிரச்சனை.
முடி உதிர்வுக்கு சிகிச்சை முறைகள்

அலோபதி முறையில், தலைமுடி, மைக்ரோஸ் கோப்பினால் பார்க்கப்படும். இதன் மூலம் அல்லது சரும பையாப்சி மூலம் முடி உறைகள் நார்மலாக இருக்கின்றனவாக என்று தெரியவரும். இரத்த நாளங்களை விரிவாக்கும் மருந்தான மினோக்ஸிடில், மற்றும் பினாஸ்டிரெய்ட் போன்ற மருந்துகள் தரப்படும். இந்த மருந்துகளை பல நாட்கள் எடுத்து கொண்டபின் பலன் தெரியும். மருந்துகளை உபயோகிக்கும் வரை தான் பலன் இருக்கும்.
முழுத்தீர்வு – நாற்று நடுவது போல், வேறிடத்திலிருந்து முடியை எடுத்து வழக்கையான இடங்களில் நடுவது. டாக்ஸீக் அலோபேசியா, அதற்கு காரணமாக விஷப்பொருளை நீக்கினாலே சரியாகிவிடும். கார்டிகோ-ஸ்டிராய்ட் மருந்துகள் புழுவெட்டை குணமாக்க பயன்படுத்தப்படுகின்றன.
ஆயுர்வேதம் சொல்லும் வழிகள்

முடிஉதிர்தல், முடி இழப்பு வழுக்கை இவைகளை ஆயுர்வேதம் கலித்யா என்கிறது. சுஸ்ருதர் முடிஉதிர்தல், பொடுகு இவ்விரண்டையும் சேர்த்து, முடி இழப்பை இந்திரலுப்தா என்றார். மற்றொரு வார்த்தையான ருய்யாவும் முடி இழப்பை குறிக்கிறது. கலித்யா, இந்திரலுப்தா, ருய்யா – மூன்றும் ஒன்று தான், வாகபட்டர் திடீர் முடிஇழப்பு இந்திரலுப்தா என்றும், நிதான முடி இழப்பை கலித்யா என்றும் சொல்கிறார்.

ஆயுர்வேதத்தின்படி, பித்தமும் வாதமும் முடிக்கால்களில் புகுந்து, முடியை உதிரவைக்கின்றன. கபம் ரத்தத்துடன் சேர்ந்து முடிஉறைகளில் தடையை உண்டாக்கி, மீண்டும் முடிவளராமல் செய்கின்றன.
முடி இழப்புக்கு பொதுவான ஆயுர்வேதசிகிச்சை

ஸ்நேஹம்
ஸ்வேதனம்
ரக்தமோக்ஷம்
ஸ்நேஹம்
தலைக்கு, குறிப்பாக முடிகளுக்கு, எண்ணை பதமிடுவது ஸ்நேஹம் கேசங்களுக்கு எண்ணை பதமிடுதல் மிகவும் பயன் தரும். உடலின் உள்ளும் புறமும் நெய்ப்பை, வழவழப்பை ஏற்படுத்துவது ஸ்நேஹம் ஆகும்.
அடிப்படையாக “மஹாபிருங்க ராஜ்” தைலம் பயன்படுத்தப்படும். பிறகு மூலிகை ஷாம்பு உபயோகப்படுத்தப்படும். இந்த சிகிச்சை வறண்ட சர்மம், தலை முடி போன்றவற்றிக்கும் தேவையான போஷாக்கை தைலம் மூலம் கொடுக்கும்.
ஸ்வேதனம்

உடல் அழுக்குகளை போக்க, சூடு ஒத்தடம் கொடுப்பதே ஸ்வேதனம் ஆகும். ஸ்நேஹத்தால் நெகிழ்ந்த உடலின் உள்ளழுக்குகளை சூட்டு ஒத்தடம் மூலம் லேசாக்கி, ரத்தத்தில் கலக்கச் செய்து வெளியேற்றுவது ஸ்வேதத்தின் செயலாகும்.
ரக்தமோக்ஷம்
கிசிச்சை ஸ்நேஹாவும், ஸ்வேதனமும் முடிந்த பின், ரத்தத்தை சுத்திகரிக்கப்படுகிறது. இதற்கு அட்டைகளை ரத்தத்தை உறிஞ்சுபவை ஆயுர்வேதம் பயன்படுகிறது. இதன் விவரங்கள் பின்னால் பார்ப்போம்.
இந்த சிகிச்சைகளைத் தவிர, சிரோதாரா, நஸ்யம், சிரோவஸ்தி, ரசாயன சிகிச்சைகளும் தேவைப்பட்டால் செய்யப்படும் முடிஇழப்பிற்கு ஆயுர்வேதம் வெகுவாக சிபாரிசு செய்யும் கூந்தல் தைலம் நீலிபிருங்காதி தைலம். இதன் செய்முறை பின்னால் வரும்.
முடிஉதிர்வதை தவிர்க்க சில வழிமுறைகள்
தினசரி காலை எழுந்தவுடன் 15 – நிமிடங்களுக்கு விரல் நுனிகளால் தலையில் நன்றாக மசாஜ் செய்யவும். இது வேர்க்கால்களுக்கு ரத்த ஒட்டத்தை அதிகப்படுத்தும் வேர்க்கால் பலஹீனத்தைப் போக்கும்.
நெல்லிக்காய் சேர்ந்த தேங்காய் எண்ணையில் தயாரிக்கப்பட்ட கேசத்தைலத்தை உபயோகப்படுத்தவும். இது முடி உதிர்வதை தடுக்கும் முடி தேவையான வைட்டமின் ‘சி’ சத்துக்களை அளிக்கும்.
தினசரி காலையும், இரவும் ஒரு தேக்கரண்டி அளவு நெல்லிக்காய் பவுடரையும், கரிசலாங்கண்ணி பவுடரையும் தண்ணீர் அல்லது பாலில் கலந்து குடித்து வர நல்ல பலன் தெரியும். இது முடியை கருமையாகவும், அடர்த்தியாகவும் வளரச் செய்யும்.
சம அளவு பச்சை நெல்லிக்காயையும், மாங்காயையும் சேர்த்து கூழ் போல் அரைத்து காலை குளிப்பதற்கு அரை மணி நேரம் முன்பாக தடவி பின்னர் எப்பொழுதும் போல குளிக்கவும். இது முடிக்கு பலத்தையும் கிருமி நாசினி தன்மையையும் அளித்திடும்.
பிரிஞ்சி இலையுடன் வேப்பிலை மற்றும் 25 கிராம் துளசி இலையையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இதில் ஐந்து டீஸ்பூன் எடுத்து ஐம்பது மி.லி. தண்ணீரில் குழைத்துத் தலையில் தடவிக் குளிக்கமுடி உதிர்வது நிற்கும்.
தினமும் 10-15 நிமிடம், பாதாம் எண்ணை அல்லது தேங்காய் எண்ணையால் மசாஜ் செய்யவும்.
வேப்ப இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து, குளிர்வித்து, கூந்தலை அலசவும்.
தேங்காய் பால், தேங்காய் எண்ணைபோல, முடிக்கு நல்லது. தேங்காய் பாலை டைரக்ட்டாகவே தலையில் தடவி அலசலாம். தேங்காய் பாலுடன் எலுமிச்சை விதைகளை அரைத்து சேர்த்துக் கொள்ளலாம். கற்பூரவில்லையின் பச்சை இலைகளையும் சேர்க்கலாம். ரோஜா இதழ்களை நன்கு அரைத்து, தேங்காய் பாலுடன் கலந்து, அரை மணி கழித்து அலசலாம். தேங்காய் பால், மருதோன்றி இலை, இவற்றை அரைத்து, சில துளி எலுமிச்சை சாறு சேர்த்து, ஷாம்பு போட்டு குளித்தபின், தலையில் தடவி வரலாம். தேங்காய் பாலுடன், காயவைத்த வெட்டிவேர், வெள்ளைமிளகு போட்டு கலந்து தலையில் தேய்த்து வந்தால் முடி கொட்டாது. நெல்லிக்காய் பொடி, வேப்பிலைப் பொடி இரண்டையும் தேங்காய் பாலில் கலந்து தலையில் தேய்த்துக் குளித்தால் முடி உதிர்வது நிற்கும்.
வெந்தயத்தை தனியாக அரைத்து தேய்த்துக் குளிக்கலாம். கால் மணி நேரத்திற்கு மேல் தலையில் வைக்க வேண்டாம். குளிர்ச்சி அதிகமாகிவிடும். ஆஸ்துமா, சைனஸ் நோயாளிகள் தவிர்க்கவும். வெந்தயத்தை பொடி செய்து காலையில் வெறும் வயிற்றில் மோருடன் குடித்துவர, உடல் சூடுகுறையும். இல்லை இரவு படுக்குமுன்பு ஒரு டீஸ்பூன் வெந்தய பொடியை, வெந்நீருடன் சேர்த்து சாப்பிடலாம். உடல் சூடு குறைந்து முடி நன்கு வளரும்.
எலுமிச்சை விதை மிளகு இரண்டையும் விழுதாக அரைத்து தடவலாம்.
தலைக்கு குளித்து வந்தவுடன் மரிக்கொழுந்தை வைத்து அல்லது திருநீற்றுபச்சிலையை தேய்த்துவிட்டு, கொண்டை போட்டுக் கொண்டால் சூடு குறைந்து முடி வளரும்.
மிளகு, வெந்தயம், நெல்லி முள்ளி இவை மூன்றையும் அரைத்து தலையில் தேய்த்து கொண்டால் முடி வளர நல்லது.
கொத்தமல்லி விதையுடன் தனியா இஞ்சியை துருவி சேர்த்து அரைத்து தேங்காய் எண்ணை சேர்த்துக் குளித்தால் பித்தம் போகும். முடி உதிர்தல் நிற்கும்.
செம்பருத்திப்பூ – இதை அரைத்து தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு நீங்கும் முடி உதிர்தல் குறையும். செம்பருத்தி இலை, பூ இவற்றை சீயக்காய் தூளுடன் கலந்து அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வருதல் மிகவும் நல்லது. கெமிகல்கள் கலந்த ஷாம்புவை உபயோகித்தபின், செம்பருத்தி இலையை வெந்நீரில் வேக வைத்து தலையில் தேய்த்து குளித்துவந்தால் ஷாம்புவினால் ஏற்படும் கெடுதிகள் உண்டாகாது.
பச்சை கறிவேப்பிலையை பால் விட்டு அரைத்து, தலையில் தடவி, 1 மணிநேரம் கழித்து குளித்தால் முடி உதிர்வதை தவிர்க்கலாம்.
தினமும் 1 டீஸ்பூன் திரிபால சூரணம், படுக்குமுன், தண்ணீர் அல்லது பால் சேர்த்து குடிக்கவும். முடி வளர்ச்சிக்கு உதவும்.
கீழ்க்கண்ட தைலங்கள், முடி இழப்பை நிறுத்தி முடி வளர உதவும் ஆயுர்வேத தைலங்கள். தொன்றுதொட்டு பயன்பட்டுவருபவை. நீலிபிருங்காதி தைலம், பிருங்காமலாதி தைலம், பிருங்கராஜ் தைலம், தூர்வாதி தைலம், கருசிலாங்கண்ணி தைலம், பொன்னாங்கண்ணி தைலம்.
அதிமதுரத்தை இடித்து பொடி செய்து, எருமைப்பால் சேர்த்து நன்றாக அரைத்து, எருமைப்பாலிலேயே குழைத்து, தலைக்கு தேய்த்து குளித்து வந்தால், வழுக்கை விழுந்த இடங்களில் முடிவளரும்.
உடலின் தற்காப்பு சக்தியை மேம்படுத்த பயன்படும் நரசிம்மரசாயனம், குமாரயஸ்வசவம், பிருங்கராஜஸவம் போன்ற உள்ளுக்கு கொடுக்கப்படும் மருந்துகளால் முடி வளர்ச்சி பெருகும்.
ஆயுர்வேதம், தலைக்கு குளித்தபின், கூந்தலுக்கு புகைபோட, வெந்தயம், துளசி, வேப்ப இலைகள், இவைகளை பயன்படுத்தினால் கூந்தல் வளர்ச்சி பெருகும் என்கிறது.

கீழ்கண்ட மூலிகைகளை அரைத்து பாலுடன் / தேனுடன் சேர்த்து தலைக்கு தேய்த்து வந்தால் கூந்தல் உதிர்வது நின்று, முடி செழித்து வளரும், ஜடமான்சி, குஷ்டா, கறுப்புஎள், நன்னாரி, நீல வண்ண அல்லி. செம்பருத்தி, பிருங்கராஜ் கரிசிலாங்கண்ணி), நீர்பிரம்மி, அதிமதுரம், குந்துமணி, குடூச்சி, இவைகளின் களிம்பை தலையில் தடவி வந்தால் முடி செழித்து, கருமையாக வளரும்.
கடுக்காய் பொடி, நெல்லிக்காய் பொடி, இவற்றை பாலில் ஊற வைத்துக் குளித்தால், முடிஉதிர்வது நிச்சயமாக நிற்கும்.

முடி உதிராமல் இருக்க அடிக்கடி தண்ணீர் குடிக்கவும்.
சோற்றுக் கற்றாழையின் உள்ளிருக்கும் சோற்றை எடுத்து தலையில் தேய்த்து வர வழுக்கை குறையலாம்.
உணவு ஜீரணம் சரிவர நடக்க வேண்டும். மலச்சிக்கலை தவிர்க்கவும்.
கபத் தொல்லைகள் சைனஸ் தொல்லைகள் இருந்தால் அவற்றை போக்க சிகிச்சை மேற்கொள்ளவும்.
யோகாசனங்கள் பலனளிக்கும்

No comments:

Post a Comment